கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 2019 கோடை நாடக விழாவின் 12 வது மற்றும் இறுதி நாடகம் - திருவடி சரணம். கதை, வசனம் பூவை மணி. இயக்கம் சந்திர மோகன்.
கதைச்சுருக்கம்:
முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியாக இருப்பவர் வைதேகி. இவரிடம் வேலைக்கு சேர்கிறார் திவாகர் எனும் இளைஞர். திடீரென ஒருநாள் வேலையில் இருந்து நீக்கப்பட அதிர்ச்சி அடையும் திவாகர் விபரீத முடிவை எடுக்க நினைக்கிறார். அப்போது ஒரு பெரியவர் சொல்லும் அறிவுரைகள் இவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது?
நடிகர்கள்:
திவாகராக ஆதித்யா, கறார் கார்ப்பரேட் முதலாளி வைதேகியாக கௌதமி, நம்பியாக கலா நிலையம் சந்துரு, வழக்கறிஞராக கிரிஷ் அய்யபத், சாரியாக ஜெயக்குமார், வைதேகியின் மகள் மீராவாக ஹேமமாலினி.
கௌதமி, சந்துரு மற்றும் கிரீஷின் அனுபவம் மிக்க நடிப்பு நாடகத்திற்கு பலம். தெளிவான மலையாள உச்சரிப்பில் அசத்துகிறார் கிரீஷ்.
பின்னரங்கம்:
பின்னணி இசை: குகப்ரசாத் - விஸ்வஜெய், ஒளி: சேட்டா ரவி, ஒப்பனை: பெரம்பூர் குமார், அரங்க அமைப்பு: பத்மா ஸ்டேஜ் கண்ணன். பின்னணி இசையமைப்பு சில இடங்களில் நன்றாகவும், ஓரிரு இடங்களில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றியது.
எழுத்து - இயக்கம்:
அழுகையும் தொழுகைதான், தேசத்தின் பாதுகாப்பு பற்றி பேசும் பிரதமரே புல்லட் ஃப்ரூப் கண்ணாடிக்கு பின்னிருந்ததுதான் உரையாற்ற வேண்டி உள்ளது போன்ற பூவை மணியின் வசனங்கள் நன்று. பெருவணிக நிறுவனங்களில் நடக்கும் உரையாடல்கள், சம்பவங்களை தொகுத்து கதையாக மாற்றி இருப்பதும் நல்ல முயற்சி.
Deadline - Deathline, Calling Bell - Caution Bell போன்ற அரதப்பழசான ஜோடிப்புறா வசனங்களை தவிர்த்து புதிதாய் சிந்தித்து இருக்கலாம்.
வேலையை விட்டு நீக்கப்படும்போதுதான் Bond எனும் மூன்றாண்டு ஒப்பந்தம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைகிறார் திவாகர். அதற்கு சொல்லப்படும் காரணம்... வேலையில் சேரும்போது அந்த ஒப்பந்தத்தை சரியாக படிக்காமல் கையெழுத்து போட்டு விட்டார் என்பதுதான். புத்திசாலி இளைஞராக இருக்கும் ஒருவர் Bond போன்ற முக்கிய விஷயத்தை படிக்காமல் வேலையில் சேர்ந்தார் என்பது நம்பும்படி இல்லை.
பல்வேறு காட்சிகள் மற்றும் வசனங்கள் கதையோட்டத்துடன் யதார்த்தமாய் நகராமல் செயற்கையாய் இருந்தது. வைதேகி - திவாகர் மோதல், திட்டமிட்ட காதல், புதுமணத்தம்பதிகளை பிரிக்கும் வைதேகி என உதாரணங்களை சொல்லலாம். க்ளைமாக்ஸும் மிகச்சாதாரணமாகவே இருக்கிறது.
இந்நாடகத்தின் ஒருசில கேரக்டர்களோடு உணர்வுபூர்வ தொடர்பு நம்முள் இருந்திருந்தால் ரசித்திருக்க முடியும். உண்மையான நிகழ்வுகளை பார்க்கிறோம் என்பதை விட ஒரு நாடகத்தை வேடிக்கை பார்க்கிறோம் என்று மட்டுமே நினைக்கும் அளவிற்கான இடைவெளி இருந்ததால்... காட்சிகளில் பரபரப்பு இருந்தாலும் அது போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் கதை - வசனகர்த்தா பூவை மணியும், இயக்குனர் சந்திரமோகனும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த கார்ப்பரேட் ஆட்டம் நன்றாக இருந்திருக்கும்.
திருவடி சரணம் - ரசாயன விபூதி.
----------------------
விமர்சனம்:
சிவகுமார்.