சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிவாசன் கதை, வசனம் எழுதி இயக்கிய நாடகம் 'தண்ணீரில் மீன் அழுதால்'. 27/07/2018 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் அரங்கேறியது.
விவாகரத்து பெற்று தந்தையின் இல்லத்தில் வாழும் பெண்மணி, விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படும் ஆசிரியர், சொந்த நிறுவனம் தொடங்க முயற்சிக்கும் இளைஞர். இவர்களைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை எனும் மீன் தொட்டிதான் நாடகத்தின் கதை.
கிட்டத்தட்ட ஒரு டஜன் நடிகர்கள். இதில் மனதில் நிற்பது கதையின் நாயகி ராஜஸ்ரீ (உமா), ஜெயசூர்யா (உமாவின் தந்தை) மற்றும் விக்னேஷ் செல்லப்பன் (ஆசிரியர்). சீரியசான கதைக்கு தங்களால் ஆன வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
சோகக்காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை தந்திருக்கலாம் ராஜஸ்ரீ. பெரும்பாலான காட்சிகள் இவரைச்சுற்றியே வலம் வருவதால் நடிப்புச்சுமை அதிகம். இவரது நாடகப்பயணத்தில் இது ஒரு முக்கியமான இடத்தைப்பெறும் எனலாம்.
தந்தை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பு என்றாலும் சோகக்காட்சிகளில் ஜெயசூர்யாவின் முகம் நிறைய மெனக்கெடும் அளவிற்கு கண்களில் அந்த உணர்வு எட்டிப்பார்க்க மறுக்கிறது. மேலும் பயிற்சி வேண்டும்.
செந்திலாக அருண்குமார் மற்றும் தேவகியாக அஞ்சலி. இருவரும் மேடை நாடகத்திற்கு புதிது போல. இவர்கள் அழும்போது நம்மால் சிரிப்பை அடக்க இயலவில்லை. அடுத்த நாடகங்களில் 'உண்மையாக' அழுது நடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாமாவுடன் நகைச்சுவை, காவல் நிலையத்தில் ரௌத்திரம், உமா மற்றும் அவரது குடும்பத்தாருடன் நெகிழ்ச்சி என நிறைவாக நடித்துள்ளார் விக்னேஷ் செல்லப்பன்.
ராகவாச்சாரி எனும் கல்யாணத்தரகர் வேடத்தில் ஆடிட்டர் நரசிம்மன். வழக்கம் போல வளவள கொழகொழவென்று பேசி பொறுமையை சோதிக்கிறார். இந்த கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் நாடகத்திற்கு எந்த ஒரு நஷ்டமும் இல்லை. நல்லவேளை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இவர் வந்து சென்றதால் நாம் தப்பினோம்.
இம்மீன்களுக்கு அவ்வப்போது டிஸ்யூ பேப்பர் தந்து கண்ணீரை துடைத்திருக்கிறது குகப்ரசாத்தின் மென்சோக பின்னணி இசை. பெரம்பூர் குமாரின் ஒப்பனை நன்று. கிச்சாவின் ஸ்பாட் லைட் ஒலியமைப்பு மேலும் வெளிச்சத்தை தந்திருக்கலாம். அரங்க அமைப்பு சைதை குமார். மிகக்குறுகிய பட்ஜெட் என்பதால் பெரும்பாலும் திரைச்சீலைகளை வைத்தே ஒப்பேற்றியுள்ளனர்.
உடல் உறுப்பு தானம் எனும் நல்லதோர் கருத்தை கையில் எடுத்து அதனை குடும்பக்கதையுடன் கலந்திருக்கும் இயக்குனர் பாரதிவாசனை பாராட்ட வேண்டும். ஆனால் பந்தியில் தலைவாழை இலையை மட்டும் பரிமாறினால் போதுமா?
சுமார் ஒருமணிநேரம் நாற்பத்தியைந்து நிமிடங்கள் நடக்கும் இந்நாடகத்தில் பெரும்பாலான காட்சிகள் மந்த நிலையிலேயே இருந்தன. சென்டிமென்ட் ரசத்தை அதிகம் ஊற்றியதில் தவறில்லை. ஆனால் அதனை சிறப்பாக செய்திருக்கலாம். நாடகம் நெடுக வெண் பொங்கல் சாப்பிட்டுவிட்டு அரை மயக்கத்தில் இருந்தது போல பார்வையாளர் இருக்கையில் அமர வேண்டி இருந்தது. மனதை மயக்கும் நாடகம் போட்டால் ரசிக்கலாம். இப்படி தாலாட்டி தூங்க வைக்கும் அளவிற்கு மயக்கினால்..?
கதை, வசனம், இயக்கம் போன்ற இலாக்காக்களில் பழமைத்தன்மை ஊறிக்கிடப்பதை பாரதிவாசன் சுய ஆய்வு செய்து உடனடியாக மராமத்து செய்ய வேண்டும். உணர்வுபூர்வமான குடும்ப நாடகங்களை எடுப்பதில் தவறில்லை. ஆனால் ரசிகர்களுக்கு எப்படி படைக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. அதனை பாரதிவாசன் சீக்கிரம் உணர்ந்தால் மகிழ்ச்சி.
தண்ணீரில் மீன்(கள்) அழுதால்.... மட்டும் போதாது. அதனைக்கண்டு நாடகம் பார்ப்போரும் அழ வேண்டும். அதாவது இப்படி ஒரு உருக்கமான படைப்பை பார்க்கிறோமோ என்று அழ வேண்டுமே தவிர... இப்படி வசமாக சிக்கிக்கொண்டோமே என்று அழக்கூடாது.
--------------------------------------------------------------
3 comments:
Great review. Thanks boss
விமர்சனத்துக்கு நன்றி
for a long time your review. Please encourage stage plays with review. Whether favour or misfavour, i like your review. In fact i am your fan. though you are pinning we didnt get much pain ( valiyum idhamaaga irundhadhu} All the best
Post a Comment